ulaga thaai mozhi naal 2025
செல்லம்மாள் மகளிர் கல்லூரி
பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனம்
கிண்டி , சென்னை – 32
உலகத் தாய்மொழிகள் தினம் -2025
உலகத் தாய்மொழிகள் தினம் கடந்த 25 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.யுனெஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டில் உலக மக்களின் தாய்மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேசத் தாய்மொழி தினமாக அறிவித்தது. அன்று முதல் தாய்மொழி பேசும் உலக மக்கள் அனைவராலும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் 2025 பிப்ரவரி 17ஆம் தேதி, முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறையுடன் இணைந்து தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் அமைப்பு தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா மற்றும் தாய்மொழியில் கையொப்பமிடும் முகாமினை நிகழ்த்தி உலகத் தாய்மொழி நாளினை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்.மதியம் 12 மணியளவில் தொடங்கிய ‘உலகத் தாய்மொழி நாள் 2025’ விழாவில் செல்லம்மாள் கல்லூரி முதல்வர், ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள், பிற துறைப் பேராசிரியர்கள் மற்றும் தமிழரண் மாணவர்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பினைப் போற்றும் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
தமிழ்த்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வி. மா. நந்தினி தாய்மொழி நாள் விழாவிற்கு வருகை தந்த சான்றோர் பெருமக்களையும் அறிவிற் சிறந்த மாணவியரையும் வரவேற்று அமைந்தார்.
செல்லம்மாள் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. மலர்விழி அம்மா அவர்கள் விழாவிற்குத் தலைமை ஏற்று, தாய்மொழி நாள் விழாவின் சிறப்புகள் குறித்தும் தமிழ் மொழியின் வரலாற்றுப் பெருமை குறித்தும் உரையாற்றினார்.
சிறப்புரை ஆற்றிய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. விமலா அம்மா அவர்கள், தாய்மொழி நாளின் வரலாற்றினை அவைக்கு எடுத்துரைத்தார். மொழிப் போர் தியாகிகளின் போராட்டத்தையும், தாய்மொழி நாள் கொண்டாடப்படுவதன் வரலாற்றுப் பின்னணியையும் குறித்துப் பேசி அமைந்தார்.
தமிழரண் மாணவர்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ம. ந. யாழினி அவர்கள் தாய்மொழி வழிக் கல்வியின் அவசியத்தையும், தாய்மொழி வழிக் கல்வி கற்ற
தமிழ் மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையையும் சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து பேசிய தமிழரண் மாணவர்களின் இணைச் செயலாளர் வி. கீ. தமிழழகி அவர்கள் தமிழரண் அமைப்பின் செயலாடுகளை விவரித்தார். தமிழ் மொழியின் வரலாற்றுப் பெருமையையும், மொழிப்போர் தியாகிகளின் போராட்டத்தையும் வரும் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் சீரிய பணியினை தமிழரண் அமைப்பு செய்து வருவதைனை விவரித்தார்.
தமிழரண் மாணவர் வே.உதயா அவர்கள் தாய்மொழி நாள் உறுதி மொழியினை அவைக்கு மொழிய, அனைவரும் தாய்மொழியை என்றும் காத்து நிற்போம் என உறுதி ஏற்றுக்கொண்டனர்.தமிழரண் மாணவர் ரே. மருதுபாண்டியன் தாய்மொழி நாள் முழக்கத்தை முழங்கினார்.
தமிழரண் அமைப்பினர், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து மகிழ்ந்தனர்.தமிழில் கையொப்பமிடும் முகாமினைக் கல்லூரி முதல்வர் அவர்களும், தமிழ்த்துறைத் தலைவர் அவர்களும் தமிழில் கையப்பமிட்டுத் தொடங்கி வைக்க, பிற பேராசிரியர்களும் மாணவியரும் தமிழில் கையொப்பமிட்டுத் தாய் மொழி நாளில் நல்லதொரு மாற்றத்தைத் தொடங்கினர்.
விழாவில் கலந்துகொண்ட சான்றோர் பெருமக்களுக்கும், தமிழரண் அமைப்பினருக்கும், கல்லூரி மாணவியருக்கும், பிற பணியாளர்களுக்கும் தமிழ்த்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வி. மு. நிஷா நன்றி கூறி அமைந்தார்.சிறப்பாக நடந்தேறிய தாய்மொழி நாள் விழாவினைத் தமிழ்த்துறையின் இளங்கலை மாணவி சீ. ஹரி கிருபா தொகுத்து வழங்கினார்.
துறைத்தலைவர் முதல்வர்
அழைப்பிதழ்
சிறப்புரை